வால்பாறையில் உள்ள கருமலை ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய் -மகளை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
வால்பாறை அருகில் உள்ள அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கருமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கவே காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த நேரத்தில் கருமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி, அவரது மகள் பிந்து ஆகிய 2 பேரும், கருமலை ஆற்றின் நடுவே உள்ள ஒரு பாறையில் துணி துவைத்து கொண்டிருந்தனர்.
தங்களை திடீரெனக் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் தாய்-மகள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் தப்பிக்க பாறையின் மீது பாதுகாப்பாக ஏறி நின்றனர். இருப்பினும் கரைக்கு வர முடியாமல் சிக்கித் பரிதவித்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பெரிய கயிறை ஆற்றின் பாறை மீது நின்ற தாய், மகளை நோக்கி வீசி எறிந்தனர்.
தொடர்ந்து அந்தக் கயிறை தாய்-மகளை பிடிக்க வைத்து, ஆற்றில் இறங்கி மெதுவாகக் கரைக்கு வரச்செய்து பத்திரமாக மீட்டனர்.