முதுகுவலி சரியாகும் என நினைத்து 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்தவர் 82 வயதான ஜாங். இவர் முதுகுவலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார்.
பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகவில்லை. இந்நிலையில், தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி குணமாகும் என மூதாட்டிக்கு அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இதனை நம்பிய மூதாட்டி ஜாங், முதல் நாளில் 3 தவளைகளை விழுங்கினார்.
அடுத்த நாளில் 5 தவளைகளை விழுங்கினார். இதனால் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்குப் பரிசோதனை செய்ததில் தவளைகளை விழுங்கியதால் ஜாங்கிற்கு செரிமான பாதிப்பு ஏற்பட்டு ஒட்டுண்ணி தொற்று மற்றும் ரத்தக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.