முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வைத் தள்ளி வைக்குமாறு விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு, ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் தேர்வை தள்ளி வைத்தால் அது விண்ணப்பதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தேர்வை தள்ளி வைக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.