தீபாவளி பண்டியை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த பூஜை முக்கியம். அது என்ன பூஜை என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
குடும்பத்தின் செல்வச் செழிப்புக்காக செய்யப்படும் பூஜை லட்சுமி குபேர பூஜை ஆகும். இது, செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ மகா லட்சுமியையும், அதனை காக்கும் குபேரனையும் ஒருசேர வழிபடும் ஒரு பூஜையாகும். இந்த பூஜையானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் வியாழக்கிழமை தினங்களில் செய்யலாம். இதேபோல் தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை அன்று பெரும்பாலானோர் இந்த பூஜை செய்வார்கள்.
தீபாவளியை ஒட்டி மக்கள் செய்யும் வழிபாட்டில் குபேர லட்சுமி வழிபாடு முக்கியமானது. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது.
தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா நீராடல் செய்த பிறகு, பூஜை அறை அல்லது பூஜை செய்யும் இடத்தை அலங்கரிக்க வேண்டும். அதில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும்.
லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழை இலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும்.
அசல்பதிவேற்றியவருக்கு நன்றி.
நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாய் பகுதியில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். இந்த கலசத்துக்கு முன்பாக வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து வைக்க வேண்டும்.
பின்னர் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழை இலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.
அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ… தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி, குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும்.
தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்; இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்