தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
கோவை மாவட்டத்தில் தமிழகம் – கேரள எல்லையான வாளையார் சோதனைச்சாவடியில், தமிழக பதிவெண் கொண்ட 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை, கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று திடீரெனச் சிறைபிடித்தனர்.
சாலை வரி செலுத்தவில்லை என கூறி அம்மாநில அதிகாரிகள், ஒவ்வொரு பேருந்துக்கும், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் இன்று முதல் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக – கேரள எல்லையான வாளையாறு சோதனைச்சாவடி வரை மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. எல்லையில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் ஓட்டுநர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பயணிகள் சிலர், கேரள போக்குவரத்து அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் தங்களது பயணம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று மட்டுமாவது பேருந்துகளை அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பயணிகளின் நலன் கருதி தற்காலிக நடவடிக்கையாகக் கேரளாவிற்குள் தமிழக ஆம்னி பேருந்துகள் சென்றன.
















