பீகார் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 68 புள்ளி 79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீஹாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் கடந்த 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 65 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், சீதாமர்ஹி, மதுபனி, சுபவுல், அராரியா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் இரண்டாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 68 புள்ளி 79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இரண்டு கட்டத் தேர்தலையும் சேர்த்து மொத்தம் 66 புள்ளி 9 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
















