பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே இரிடியம் முதலீடு எனக்கூறி 2.85 கோடி ரூபாயை மோசடி செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் அதே பகுதியில் சொந்தமாக மிளகாய் மண்டி நடத்தி வருகிறார். இவருக்குத் தொழில் ரீதியாக சிவகுமார், ராஜகோபால், ராஜசேகர், பஜிலா பேகம் மற்றும் புகழ் ஆகியோர் பழக்கமாகியுள்ளனர்.
இவர்கள் 5 பேரும் இரிடியத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனவும் இரு மடங்காகப் பணம் கிடைக்கும் எனவும் நாகராஜனிடம் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய நாகராஜன் 2.85 கோடி ரூபாய் பணத்தை முதலீட்டுக்காகக் கொடுத்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளை கடந்தும் பணத்தை திருப்பித் தராததால் அதுகுறித்து கேள்வி எழுப்பிய நாகராஜனை 5 பேரும் மிரட்டியதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பெண் உட்பட 5 பேரையும் கைது செய்தனர்.
















