ரேஷன் கடைகளில் நாப்கின்களை மானியம் அல்லது இலவசமாக வழங்கக் கோரிய வழக்கில், டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் சுகாதாரத் துறை உள்ளிட்ட மூன்று துறை செயலாளர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏழை, கிராமப்புற பெண்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளில், மானியம் அல்லது இலவசமாக நாப்கின்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்த விசாரணையில், மனுவுக்குப் பதிலளிக்க அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
அப்போது, ஏற்கனவே இறுதி அவகாசம் வழங்கியும் பதில்மனு தாக்கல் செய்யவில்லை என குறிப்பட்ட நீதிபதிகள் டிசம்பர் 16 ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இல்லையென்றால், சமூக நலத் துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
















