சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் நேற்று இரவு முதல் இன்று இரவு வரை ஒருநாள் மூடப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை ஆகிய பகுதிகளின் நடுவே உயர்நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில், அதிக தூரமாக கருதிய பொதுமக்கள், உயர்நீதிமன்றத்தின் வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.
இதனை கவனத்தில் கொண்ட உயர்நீதிமன்ற நிர்வாகம், எதிர்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளுக்கு உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒருநாள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் நவம்பர் இறுதி வாரம் சனிக்கிழமை இரவு முதல் மறுநாள் இரவு வரை நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும் நிலையில், நடப்பாண்டு நவம்பர் 22ஆம் தேதி இரவு 8 மணி முதல் 23ஆம் தேதி இரவு 8 மணி வரை அனைத்து வாயில்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நேரத்தில் நீதிமன்றத்தில் நுழைய வழக்கறிஞர்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை என உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
















