லைகா நிறுவனத்துக்கு நடிகர் விஷால் வழங்க வேண்டிய பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் செலுத்தியது.
கடன் தொகையை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளையும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டது.
ஒப்பந்தத்தை மீறிப் படங்களை வெளியிட்டதாகவும், பணத்தை திருப்பித் தர விஷாலுக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் விஷால் தரப்பு திருப்பிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷஃபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே என விஷால் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். நடிகர் விஷால் தன்னை திவாலானவர் என அறிவிக்கத் தயாராக இருக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கில் 10 கோடி ரூபாய் ரொக்கத்தை டெபாசிட் செய்யவும் விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர்.
மேலும், விஷால் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவிற்கும் இடைக்கால தடைவிதித்து ஆணையிட்டனர்.
















