வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்திய கடற்பகுதியில் ஒரே நேரத்தில் 3 சுழற்சி நிலவுவதாகத் தெரிவித்தார்.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் எனத் தெரிவித்தார்.
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் வரும் 29ஆம் தேதி மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5% கூடுதலாகப் பொழிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
















