கினியா-பிசாவ் நாட்டில் ராணுவ புரட்சி காரணமாக அதிபர் மாளிகைக்குள் புகுந்த ராணுவத்தினர் அதிபர் உமரோ சிசோகோ எம்பலோவை கைது செய்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கினியா-பிசாவ் குடியரசு நாட்டின் அதிபராக உமரோ சிசோகோ எம்பலோ பதவி வகித்து வருகிறார்.
அங்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி சார்பில் உமரோ சிசோகோ மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சி வேட்பாளராகப் பெர்னாண்டோ டியாஸ் போட்டியிட்டார்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன் எதிர்க்கட்சி வேட்பாளர் டியாஸ் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் கினியா-பிசாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதிபர் மாளிகைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ராணுவத்தினர், அதிபர் உமரோ சிசோகோவை கைது செய்தனர்.
மேலும் நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
















