செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டிட்வா புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கும், ஒரு சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பூங்காவில் அதே பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பூங்காவில் உள்ள மின்கம்பங்களில் இருந்து மின்சாரம் தாக்கியதில் சிறுமி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
அருகிலிருந்தவர்கள் குழந்தையை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பூங்காவில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் மின்சார துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கிடையே பூங்காவில் உள்ள அனைத்து மின் கம்பங்களிலும் உள்ள உபகரணங்கள் உடைந்த நிலையில் இருப்பதாகவும் அவற்றை சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
















