திருச்சி சண்முகா நகர் பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட பூங்கா பணிகளை ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், மேற்கு தொகுதிக்குட்பட்ட சண்முகா நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 2023ஆம் ஆண்டு 48 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பூங்கா பணிக்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
2 ஆண்டுகள் ஆகியும் பூங்கா பணிகள் தொடங்காதது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், பூங்கா கட்டுமான பணியை உடனடியாகத் தொடங்க கோரி புத்தூர் பகுதியில் சண்முகா நகர் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பூங்கா பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
















