கொல்கத்தா வந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்த நிலையில், அவர் சில நிமிடங்களிலேயே மைதானத்தை விட்டு வெளியேறியதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றத்திற்கும், கோபத்திற்கும் உள்ளாகினர். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி “GOAT INDIA TOUR” பயணத்தின் ஒரு பகுதியாகக் கொல்கத்தாவிற்கு வருகை புரிந்தார். விமான நிலையம் வந்தடைந்த மெஸ்ஸிக்கு அங்குத் திரண்டிருந்த அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை நேரில் காண அங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
அவரை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் 4 ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்ட டிக்கெட்டுகளை வாங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி சுமார் 20 நிமிடங்களுக்குள் அங்கிருந்து வெளியேறியதால், பெருந்தொகை கொடுத்து அவரை காண வந்த ரசிகர்கள் கடும் ஏமாற்றமும், கோபமும் அடைந்தனர்.
குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் மெஸ்ஸியை சூழ்ந்துகொண்டதால், குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் அவரை காணும் வாய்ப்பு பிற ரசிகர்களுக்குக் கிடைக்காமல் போனதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மைதானத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த ஒரு சில ரசிகர்கள் காலி பாட்டில்களையும், நாற்காலிகளையும் மைதானத்திற்குள் வீசிக் கலவரத்தில் ஈடுபட்டனர்.
சிலர் தடுப்புகளை உடைத்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைய முயன்றதால் நிலைமை மேலும் மோசமானது. ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து வந்தும் தங்களால் மெஸ்ஸியை காணமுடியவில்லை என வேதனை தெரிவித்த ரசிகர்கள், தாங்கள் வந்தது மெஸ்ஸியை பார்க்கத்தான் என்றும், அரசியல்வாதிகளை அல்ல என்றும் ஆவேசமாகத் தெரிவித்தனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்குக் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை என குற்றம்சாட்டிய ரசிகர்கள், இந்த நிகழ்ச்சியைப் பணம் பறிக்கும் ஒரு மோசடி செயலாகக் கருதுவதாகக் காட்டமாக விமர்சித்தனர்.
மேலும், தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுத்தர மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நிர்வாக கோளாறுகளால் ஏற்பட்ட குழப்பங்களுக்காக மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும் இந்த நிர்வாக கோளாறுகள் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் எனவும், தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை கைது செய்துள்ளதாகவும் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜாவேத் ஷமீம் தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்களுக்கு அவர்களது டிக்கெட் பணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ள நிலையில், அந்தப் பணிகள் எவ்வாறு நடைபெறும் என்பதை காவல்துறை நேரடியாகக் கண்காணிக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மொத்தத்தில் தங்கள் ஆஸ்தான நாயகனை காண பெருந்தொகை செலவழித்து வந்த ரசிகர்களின் உணர்வுகள், அரசின் நிர்வாகக் கோளாறுகள் காரணமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், வருங்காலத்தில் நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகள், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும், பாதுகாப்பையும் மையமாக கொண்டு நடத்தப்பட ஒரு பொறுப்பான நிர்வாகம் அவசியம் என்பதை இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது.
















