தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கான இடங்களை கண்டறிய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தமிழக அரசு தரப்பு மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் மாநில அரசுகளுக்குக் கிடையாது என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கல்வி என்பது ஒருங்கிணைந்த பொது பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தனர். அதேபோல் கல்வியை மொழி பிரச்னையாக மாற்றாதீர்கள் என்றும், தயவு செய்து தமிழகத்தில் மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள் என்றும் அறிவுறுத்தினர்.
மத்திய அரசின் செயல்பாடுகளைத் திணிப்பு எனக் கருதாமல் மாணவர்களுக்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்தியக் குடியரசுக்குள் தமிழகம் இல்லையா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் பேசி நிலைமையை சரிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும் எங்கள் மாநிலம், எங்கள் அரசு என யாரும் சொல்ல வேண்டாம், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் நாடு இந்தியா என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து 6 வாரங்களுக்குள் பள்ளிகள் அமைப்பதற்கான இடங்களை கண்டறிய வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















