பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க எத்தியோப்பிய பயணம் அந்நாட்டுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள BRICS மாநாட்டை இந்தியா நடத்த வழிவகுத்துள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டின் மன்னர் 2-ம் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்தியா – ஜோர்டான் முதலீட்டாளர்கள் சந்திப்பில் உரையாற்றினார். ஜோர்டான் பயணத்தின்போது இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ஜோர்டானில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்ததாக எத்தியோப்பியா சென்றார் பிரதமர் மோடி. கடந்த 15 ஆண்டுகளில் அந்நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் இவர் என்பதால் இந்தப் பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அண்மையில் இந்தியாவின் ஆதரவுடன் எத்தியோப்பியா BRICS அமைப்பில் உறுப்பினராக இணைந்துள்ளதால், இரு நாடுகளுக்கிடையேயான உறவை இந்தப் பயணம் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமத் அலி தலைமையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், இருநாட்டு தலைவர்களும் உலக அரசியல், பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் குரலை உலக மேடையில் வலுப்படுத்துவது குறித்து ஆழமாக விவாதித்தனர். தொடர்ந்து எத்தியோப்பியா நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடிக்கு ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ எனப்படும் அந்நாட்டின் உயரிய விருதும் வழங்கப்பட்டது.
இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, சோலார் மின்சாரம் தொடர்பான திட்டங்கள்குறித்து இருநாட்டு தலைவர்களிடையே விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக எத்தியோப்பியாவில் சோலார் கூரைகள், சோலார் பம்புகள் அமைக்கும் திட்டங்கள் மூலம், மின்சார வசதியை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு மற்றும் சுரங்கத் துறைகளிலும் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எத்தியோப்பியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை சார்ந்திருப்பதால், உணவு பாதுகாப்பு மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விவாதங்களும் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றன.
இது தவிர, பொது டிஜிட்டல் உட்கட்டமைப்பு, Cyber security மற்றும் சுரங்கத் துறை வளர்ச்சி குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன. இரு நாடுகளிடையேயான தற்போதைய வர்த்தகம் 571.52 மில்லியன் டாலரை கடந்துள்ள நிலையில், 650-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் 5 பில்லியன் டாலர் அளவிற்கு எத்தியோப்பியாவில் முதலீடு செய்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன. இதன் மூலம் எத்தியோப்பியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஏற்கனவே இரு நாடுகளின் கல்வித்துறை மற்றும் பண்பாட்டு தொடர்புகளும் வலுவாக உள்ளதால், பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க இந்தப் பயணம், இந்தியா – எத்தியோப்பியா உறவுகளை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. குறிப்பாகப் பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தப் பயணம் முக்கிய பங்கு வகித்துள்ள நிலையில், எத்தியோப்பியாவுடன் ஏற்பட்ட இந்த நெருக்கம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள BRICS மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்த வழிவகுக்கும் எனவும் நம்பப்படுகிறது.
















