தோஷகானா-2 ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகியோருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்..
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் இருந்து வருகிறார். பிரதமராக இருந்த காலகட்டத்தில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், அரசுப் பரிசுகள் மற்றும் நிதி விவகாரங்களில் முறைகேடுகள் செய்ததாகவும் இம்ரான் கான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அதேபோல, கடந்த 2023-ம் ஆண்டு மே 9-ம் தேதி, நடந்த கலவரங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்பாகத் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழும் அவர் பல வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். அதில் 190 மில்லியன் பவுண்ட் ஊழல் வழக்கில் ஏற்கனவே இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவியான புஷ்ரா பிபியும் அதே ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவியான புஷ்ரா பிபி ஆகியோர் மீது தொடரப்பட்ட தோஷ்கானா-2 ஊழல் வழக்கிலும், அவர்களுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2021-ம் ஆண்டு மே மாதம், சவூதி அரேபிய அரச குடும்பத்துடனான அதிகாரபூர்வ சந்திப்பின்போது, பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் புல்காரி நகை தொகுப்பு பரிசாக வழங்கப்பட்டது.
வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து கிடைக்கும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை, அரசு சொத்தாகக் கருதி ‘தோஷகானா’ எனும் அரசு கருவூலத்தில் பாதுகாக்க வேண்டும் என அந்நாட்டின் சட்ட விதிகள் கூறுகின்றன. ஒருவேளை அந்தப் பரிசுப் பொருளை சம்மந்தப்பட்ட நபர் தானே வைத்துக்கொள்ள விரும்பினால், அவற்றின் உண்மையான சந்தை மதிப்புக்கு நிகரான தொகையை அரசுக்குச் செலுத்த வேண்டும் எனவும் விதிகள் கூறுகின்றன.
ஆனால், இம்ரான் கான் சுமார் 8 கோடி பாகிஸ்தான் ரூபாய் மதிப்புடைய அந்த நகை தொகுப்பை, விதிகளை மீறி வெறும் 29 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் செலுத்தி தானே வைத்துக்கொண்டதாக அரசு தரப்பு குற்றம் சாட்டியது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகியோர் மீது தோஷகானா-2 ஊழல் வழக்கு தொடரப்பட்டது.
இந்த விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பாகிஸ்தான் கூட்டாட்சி விசாரணை அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த வழக்கு தொடர்பாக இம்ரான் கான் உள்ளிட்ட இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த அக்டோபரில் நடந்த விசாரணையின்போது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை அவ்விருவரும் மறுத்தனர்.
அத்துடன் இது அரசியல் உள்நோக்கத்துடன் தங்களை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். அதே நேரத்தில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியும், வழக்கின்போது குடும்பத்தாரை அனுமதிக்க மறுத்து, மூடப்பட்ட அறைகளுக்குள் நியாயமற்ற முறையில் விசாரணை நடைபெற்றதாகக் குற்றம் சாட்டியது. இது தொடர்பாகத் தங்கள் சமூக வலைதள பக்கங்களிலும் அக்கட்சி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ராவல்பிண்டியில் உள்ள ஆடியாலா சிறையில் நடந்த இறுதி விசாரணையின்போது, சிறப்பு நீதிபதி ஷாரூக் அர்ஜுமந்த் குற்றவாளிகள் இருவருக்கும் தண்டனை விவரங்களை அறிவித்தார். குறிப்பாக இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் குற்றவியல் சட்டத்தின் 34 மற்றும் 409 பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஊழல் தடுப்பு சட்டத்தின் 5(2)-வது பிரிவின் கீழ் கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதே பிரிவுகளின் கீழ் புஷ்ரா பிபிக்கும் மொத்தமாக 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன் சேர்த்து இருவருக்கும் சேர்த்து 1 கோடியே 64 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் கூடுதலாகச் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சிறப்பு நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே இந்தத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக, இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பிபி தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்த தோஷகானா-2 ஊழல் வழக்கில் விதிக்கப்பட்டுள்ள 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஏற்கனவே சிறையில் இருந்து பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வரும் இம்ரான் கானின் அரசியல் எதிர்காலத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு பாகிஸ்தானின் அரசியல் சூழலில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில், பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த வழக்கில் மேல்முறையீடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
















