அரக்கோணம் அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு நாய் கடித்ததற்கு முறையான சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்த இளைஞர், ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மோசூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரான திவாகர் என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது.
நாய் கடிக்கு முறையான சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்த திவாகர் கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
திவாகருக்கு திடீரெனக் காய்ச்சல் அதிகமான நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.
அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திவாகருக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருப்பதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து, திவாகரை மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், திவாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















