தலைவிரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறையை மிகவும் நேர்த்தியாக கையாண்டு கொண்டிருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.. வறண்ட பாலைவனமான அறியப்படும் அந்நாடு, எப்படி தண்ணீர் தேவையை சமாளிக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்..
உலகின் மிகவும் ஆடம்பர நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்… வானைத்தொடும் கட்டடங்கள், சூப்பர் கார்கள், ஆடம்பரமான வாழ்க்கை முறை போன்றவற்றிற்கும் பெயர் பெற்றது… செழுமையின் பிம்பத்தைத் தாண்டி, அந்நாட்டின் பொருளாதார ரீதியாகவும் வலிமையாகவே உள்ளது… எனினும், அந்நாடு எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை நன்னீர் பற்றாக்குறை…
அரேபிய தீபகற்பத்தின் வறண்ட பாலைவனத்தில் அமைந்துள்ள இந்நாட்டில் எண்ணெய் வளம் இருந்தாலும், நீராதாரம் என்பது சொற்ப அளவே… நிரந்தர ஆறுகளோ, ஏரிகளோ இல்லாத ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு குறைந்தபட்ச மழைப்பொழிவு ஓரளவு கைகொடுத்தாலும், ஹஜர் மலைகளில் இருந்து வரும் மழைநீரையே திடமாக நம்பியுள்ளது… ஒரு காலத்தில் இயற்கை ஆதாரங்கள் நீர்த்தேவைகளை பூர்த்தி செய்திருந்தாலும், அதிகரித்த நகரமயமாக்கல், மக்கள்தொகை பெருக்கம், காலநிலை மாற்றம், நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்றவை நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியது…
கடல்நீரை நன்னீராக்கும் செயல் முறைகள் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கிறது. கிட்டத்தட்ட இதற்காக 70 ஆலைகள் செயல்பாட்டில் உள்ள நிலையல், அந்நாட்டின் நீர்த்தேவையில் 42 சதவிகிதம் உப்புநீக்கம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.. உலகின் மொத்த உப்புநீக்கப்பட்ட நீர் உற்பத்தியில் 14 சதவிகித பங்களிப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்குகிறது.. 2008 மற்றும் 2012ம் ஆண்டுகளுக்கு இடையில், நீர் தேவை 35.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது, இது நிலையான உப்புநீக்கத்திற்கான தேவையை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று, நீண்டகால தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் உப்புநீக்க தொழில்நுட்பங்களை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…
நிலத்தடி நீர் இருப்புகள் இன்னும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அவை நிரந்தர தீர்வாக அமையவில்லை… அதே நேரத்தில், கழிவுநீரை மீண்டும் சுத்திகரித்து பயன்படுத்துவதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், முன்னேற்றம் கண்டுள்ளது.. சுத்திகரிக்கப்பட்ட நீர், நிலங்களுக்கும், தொழில்துறை பயன்பாடுகளுக்கும் திருப்பிவிடப்படுவதன் மூலம், மதிப்புமிக்க நன்னீர் பாதுகாக்கப்படுகிறது…சுத்திகரிக்கப்பட்ட அனைத்து கழிவுநீரிலும் 95 சதவிகிதம் பாதுகாப்பாக மீண்டும் பயன்படுத்துவதை தேசிய இலக்காக நிர்ணயித்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…
நெருக்கடிகளின் போதும் நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஐக்கிய அரபு அமீரகம் பெரிய அளவிலான நீர்த்தேக்கங்கள் மற்றும் அவசரகால சேமிப்பு தொட்டிகளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது.
நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நீர் பாதுகாப்பு உத்தி 2036 ஐ அறிமுகப்படுத்தியது. அதன்படி மொத்த நீர்த் தேவையில் 21 சதவிகிதத்தை குறைப்பது, நீர் உற்பத்தித்திறன் குறியீட்டை ஒரு கன மீட்டருக்கு 110 அமெரிக்க டாலராக உயர்த்துவது, நீர்பற்றாகக்குறை குறியீட்டை மூன்று டிகிரி குறைப்பது, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை 95 சதவிகிதம் மீண்டும் பயன்படுத்துவது, தேசிய நீர் சேமிப்புத்திறனை விரிவுபடுத்துவது, பாதுகாப்பான குடிநீரை மலிவு விலையில் வழங்குவது போன்றவற்றை முன்னிறுத்தியுள்ளது….
இயற்கை பற்றாக்குறை இருந்தபோதிலும் தண்ணீரை நிர்வகிப்பதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெற்றி, அதன் தொலைநோக்கு சிந்தனை கொண்ட நிர்வாகம் மற்றும் பொறியியல் திறமையை வெளிக்கொணர்ந்துள்ளது…
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பற்றி விவாதங்கள், பாலைவனத்தில் செழித்து வளர்வது பற்றியது மட்டுமல்ல, புதுமையும் தொலைநோக்குப் பார்வையும், பற்றாக்குறையை எவ்வாறு பலமாக மாற்றும் என்பதை பற்றியது….
காலநிலை மாற்றம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி உலகளவில் நீர் விநியோகத்தை அச்சுறுத்தும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மற்ற வறண்ட நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..
















