விலைவாசி உயர்வு மற்றும் பணவீழ்ச்சிக்கு எதிராக ஈரானில் நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. வணிகர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, முக்கிய பல்கலைக்கழகங்களில் அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கான காரணம் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பல ஆண்டுகளாகவே மேற்கத்தியத் தடைகளால் ஈரான் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 2019ம் ஆண்டில், பெட்ரோல் விலை உயர்த்தியதைத் தொடர்ந்து ஈரானில் தலைநகர் உட்பட 100 நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதில் பலர் உயிரிழந்தனர்.
மீண்டும் 2022ம் ஆண்டு விலைவாசி உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டம் ஈரானையே திக்கு முக்காட வைத்தது. ஹிஜாப் ஆடை விதிகளை மீறியதாகக் கைது செய்யப்பட்ட 22 வயது மஹ்சா அமினி காவலில் மரணமடைந்ததை அடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதில் பாதுகாப்புப் படையினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட நாட்டின் அணுசக்தித் திட்டம் தொடர்பான சர்வதேசத் தடைகளை கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஐ.நா., சபை மீண்டும் அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஈரானின் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளானது. குறிப்பாக, டாலர் மற்றும் பிற உலக நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக ஈரானின் ரியால் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஈரானில் இறக்குமதி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் சில்லறை வர்த்தகர்கள் தொழிலில் கடும் இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர்.
கடந்த வாரம் தலைநகர் தெஹ்ரானின் மிகப்பெரிய மொபைல் போன் சந்தையான கிராண்ட் பஜாரில் உள்ள கடைக்காரர்கள் அரசுக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் மட்டுமில்லாமல் கராஜ், ஹமேதான், கெஷ்ம், மலார்ட், இஸ்பஹான், கெர்மன்ஷா, ஷிராஸ் மற்றும் யாஸ்த் ஆகிய முக்கிய நகரங்களிலும் வணிகர்களின் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தப் போராட்டக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசி அடித்து விரட்டி நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது. பண வீழ்ச்சியால் ஒரு ஃபோன் கவரை கூட விற்க முடியாத நிலையில், அதிகரித்து வரும் இறக்குமதி செலவுகளைச் சமாளிக்க அரசு எந்த ஆதரவும் அளிக்கவில்லை என்றும், டாலர் விலை வணிகர்கள் வாழ்க்கையை எப்படிப் பாதித்தது என்பது பற்றியும் கண்டுகொள்ளவில்லை என்றும் வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அரசு, புதிய ஆளுநராக முன்னாள் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சர் அப்துல்நாசர் ஹெம்மதியை நியமிப்பதாக அறிவித்துள்ளது. போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு உள்துறை அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ள அதிபர் மசூத் பெசெஷ்கியான், நாட்டின் பிரச்னையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரானில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சர்வாதிகாரி சாகட்டும் என்றும், அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டுள்ளனர். மேலும், இஸ்லாமிய புரட்சியால் தூக்கியெறியப்பட்ட மறைந்த ஷா முகமது ரெசா பஹ்லவியின் மகனுக்கு ஆதரவாக ஷா வாழ்க என்றும் கோஷமிட்டுள்ளனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவில் வாழும் ரெசா பஹ்லவி, கொமேனி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை, நாட்டின் பொருளாதார நிலை தொடர்ந்து மோசமடையும் என்றும், ஈரான் மக்களுடன் தாம் நிற்பதாகவும், ஒற்றுமையாக போராடும் நீதிக்கான போராட்டம் வெல்வது உறுதி என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எதிர்பாராத வகையில், போராட்டக்காரர்களின் தைரியத்தைப் பாராட்டுவதாக கூறியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறையின் பாரசீக மொழி எக்ஸ் பக்கத்தில், பல ஆண்டுகால தோல்வியுற்ற கொள்கைகள் காரணமாக பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு சிறந்த எதிர்காலத்தை நாடும் ஈரான் மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான பணவீக்கம், சீரழிந்த பொருளாதாரம் என ஈரான் பல பிரச்சனைகளில் உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானில் ஆட்சி மாற்றம் குறித்து சொல்லாமல் ஈரான் மக்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்பது மட்டும் தமக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
















