சிப் உற்பத்தியில் 50 சதவீதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று சிப் உற்பத்தியாளர்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளைச் சமாளிக்கவும், உள்நாட்டு செமி கண்டக்டர் துறையை மேம்படுத்தவும், வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை நம்பியிருப்பதைக் குறைக்கவும் இந்த உத்தரவை சீனா பிறப்பித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனாவின் தொழில் நுட்ப முன்னேற்றத்தை கண்டு அமெரிக்க அரசு பயந்தது என்றுதான் சொல்லவேண்டும். இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற உடனேயே ட்ரம்ப், சீனாவுடனான வர்த்தகப் போரைத் தொடங்கினார்.
இதன் காரணமாக, சீனாவின் சில முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது அமெரிக்கத் தடைகளை விதித்தது. சீனாவின் செமி கண்டக்டர் உற்பத்தியை முடக்கி , AI துறையில் அந்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளை மும்முரமாக எடுத்தது.
இப்படி அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆதிக்கம் அதிகமாக அதிகமாக, அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவுக்கு சீனா வளர்ந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு மே மாதமே சீனாவின் செமி கண்டக்டர் துறையை மேம்படுத்த சுமார் 47 பில்லியன் டாலர்களை சீன அரசு முதலீடாக ஒதுக்கியது.
சர்வதேச அளவில், உள்நாட்டில் செமி கண்டக்டர் உற்பத்தியை அதிகரிப்பதையும் வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் மீதான சார்பைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.
மெமரி சிப்கள், wafer foundries, chip equipment உள்ளிட்டவை அதிகமாக உள்நாட்டிலேயே சீனா தயாரிக்கிறது. சீனாவில் உள்நாட்டு சந்தையில் செமி கண்டக்டர் உற்பத்தி செய்யும் இயந்திரத்துக்கான தேவை கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 40 மடங்கு வளர்ந்துள்ளது.
உலக செமி கண்டக்டர் சந்தையில் சீனாவின் பங்கு 15 சதவீதம் ஆகும். 2022 இல், சீனா உலகளாவிய கணினி மென்தகடு உற்பத்தியில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக சீனாவின் பங்காக இருந்தது. இது 2032 ஆம் ஆண்டுக்குள் 86 சதவீதமாக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், சிப் உற்பத்தியாளர்கள், தங்கள் விரிவாக்கங்களில் குறைந்தது 50 சதவீதத்தை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவு, இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், திட்ட ஒப்புதல்களுக்காக கொள்முதல் டெண்டர்கள் மூலம் தங்கள் உபகரணங்களில் குறைந்தது பாதி சீனாவில் தயாரிக்கப்பட்டதாக நிரூபிக்க வேண்டும் என்று அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங்க், நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான தன்னிறைவு பெற்ற உள்நாட்டு குறைக்கடத்தி விநியோகச் சங்கிலியை உருவாக்கும் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார்.
இதன்படி,சீன விஞ்ஞானிகள் அதிநவீன சிப்-களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஒரு இயந்திரத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு சுமார் 850 மில்லியன் யுவான் மதிப்புள்ள உள்நாட்டு லித்தோகிராஃபி இயந்திரங்கள் மற்றும் பாகங்களுக்கான 421 ஆர்டர்களை அரசுடன் இணைந்த நிறுவனங்கள் செய்துள்ளன. இது உள்நாட்டு தொழில்நுட்பங்களுக்கான தேவை அதிகரிப்பைக் குறிப்பதாக கூறப்படுகிறது.
சந்தை மூலதனத்தின் அடிப்படையில் சீனாவின் மிகப்பெரிய செமி கண்டக்டர் நிறுவனமான Semiconductor Manufacturing International Corporation SMIC, 7nm சிப்களை உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், 14nm மற்றும் 28nm சிப் களையே உற்பத்தி செய்கின்றது. அமெரிக்க வர்த்தக கட்டுப்பாடுகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
சீனாவின் மற்றொரு பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான Naura நௌரா, தனது கருவிகளை SMIC-ன் அதிநவீன 7nm நானோமீட்டர் உற்பத்தியைச் சோதித்து வருகிறது. 300 க்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட மேம்பட்ட சிப் களுக்குத் தேவையான கருவிகளை Naura நௌரா வழங்கி வருகிறது.
ஆச்சரியப்படும் வகையில், 2020 மற்றும் 2021-ல் பதிவு செய்ததை விட இருமடங்குக்கும் அதிகமாக இந்த ஆண்டு, நௌரா நிறுவனம் 779 காப்புரிமைகளைப் பதிவு செய்துள்ளது. மேலும், AMEC நிறுவனம் சுமார் 259 காப்புரிமைகளைப் பதிவு செய்துள்ளது.
அதே நேரத்தில், 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் நௌராவின் வருவாய் 30 சதவீதமும் AMEC நிறுவனதின் வருவாய் 44 சதவீதமும் உயர்ந்துள்ளது.
முன்பு இறக்குமதியை முழுமையாகச் சார்ந்திருந்த சில சிப் உபகரணப் பிரிவுகளில், சீனா ஏற்கனவே சுமார் 50 சதவீத சுயசார்பை அடைந்துவிட்டதாக கூறும் பொருளாதார வல்லுநர்கள், சீன அரசின் புதிய உத்தரவால், அதிநவீன தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே சீனா உருவாகும் என்றும் கூறுகிறார்கள்.
இதன் காரணமாக,சீன சந்தையை நம்பியிருக்கும் உலகளாவிய செமி கண்டக்டர் உபகரண உற்பத்தியாளர்கள் கணிசமாகப் பாதிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
















