பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.
இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். அந்தமானில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டை சென்று, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பின்னர், திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கும் அவர், இரவு 7.30 மணியளவில் நடைபெறும் பாஜக மையக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் நடைபெறும் கூட்டம் என்பதால் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனிடையே அமித்ஷாவின் ஹெலிகாப்டர் வந்திறங்குவதற்கு ஏதுவாக புதுக்கோட்டையில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஐந்து மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வரும் அமித்ஷா, அங்கிருந்து நேரடியாக ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ளார். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டு, புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறக்கி சோதனை செய்யப்பட்டது.
















