தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றை வடிவமைத்து கடல் கடந்து காலடி எடுத்து வைத்து முதல் இந்து ராஜ்யத்தை அமைத்த கௌண்டின்யா ரிஷியின் பெயராலே புதிய கப்பல் மீண்டும் கடல் பயணத்தைக் தொடங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பழங்காலத்தில் கப்பல்களை பாய் மரங்களைக் கொண்டுதான் இந்தியர்கள் கட்டினார்கள். பல நூற்றாண்டுகள் பழமையான கப்பல் கட்டுமான கலையை மத்திய பாதுகாப்புத்துறை மீண்டும் புதுப்பித்துள்ளது.
பண்டைய பரந்த பாரதத்தில் கலிங்க தேசத்தில் ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரிஷி தான் கௌண்டின்யா. முதன்முதலாக பாரதத்தில் இருந்து கடல் தாண்டி இன்று வியட்நாம் என்று அழைக்கப்படும் அன்றைய கம்போடியாவுக்கு வங்கக் கடல் தாண்டி பயணம் செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர் இந்த கௌண்டின்யா.
அந்நாட்டின் இளவரசியை மணந்து ஃபுனான் என்ற பெயரில் உலகத்திலேயே முதல் இந்து ராஜ்யத்தை நிறுவிய பெருமையும் கௌண்டின்யாவுக்கு உண்டு.
அஜந்தா குகை ஓவியங்களில் ஒன்றில் சித்தரிக்கப்பட்டுள்ள கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கப்பலின் மறு உருவாக்கமான இந்தக் கௌண்டின்யா கப்பலின் சிறப்பு என்னவென்றால் இதில் கொஞ்சமும் ஸ்டீல் கிடையாது. கப்பல் கட்டுமானத்தில் எங்கும் ஆணி அறையப்படவில்லை. வெல்டிங்க் வொர்க் எதுவும் கிடையாது.
முழுவதும் இந்தியர்களுக்கே உரித்தான 2000 ஆண்டு பாரம்பரிய கப்பல் கட்டும் தொழில் நுட்பங்களுடன் மீண்டும் இந்தக்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையைச் சொல்வதென்றால் ஒரு கப்பல் தைக்கப் பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ்வி தாரிணி போன்ற பயிற்சி மற்றும் கடல் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் இந்தியக் கடற்படையின் பாய்மரப் படகுகள் குழுமத்தின் ஒரு பகுதியாக இந்த கௌண்டின்யா கப்பல் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல், தலைமை கப்பல் கட்டும் வல்லுநர் பாபு சங்கரன் தலைமையில், கேரளாவைச் சேர்ந்த பாரம்பரிய கைவினைஞர்கள் குழுவால் கட்டப்பட்டுள்ளது.
நவீன கப்பல்களைப் போலல்லாமல், ஐஎன்எஸ்வி கௌண்டின்யாவில் திசைதிருப்பி இல்லை. நீண்ட துடுப்புகளைப் பயன்படுத்தி இயக்கப்படும் இக்கப்பல், சதுர வடிவ பருத்திப் பாய்மரங்களைக் கொண்டு முன்னோக்கிச் செல்கிறது.
வழிசெலுத்தலுக்கு காற்று, கடல் நீரோட்டங்கள் மற்றும் நட்சத்திரங்கள் போன்ற இயற்கை கூறுகளைச் சார்ந்து இந்தக் கப்பல் இயக்கப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றை வடிவமைத்து கடல் கடந்து காலடி எடுத்து வைத்து முதல் இந்து ராஜ்யத்தை அமைத்த கௌண்டின்யா ரிஷியின் பெயராலே புதிய கப்பல் மீண்டும் கடல் பயணத்தைக் தொடங்கியுள்ளது.
ஐஎன்எஸ்வி கௌண்டின்யா கப்பல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு தனது கடல் முதல் பயணத்தை கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி தொடங்கியுள்ளது.
இந்தியாவின் வளமான கடல்சார் மரபுகளை எடுத்துக்காட்டும் ஐஎன்எஸ்வி கௌண்டின்யாவின் முதல் பயணம் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தனித்துவம் மிக்க கப்பலை மீண்டும் உயிர்ப்பித்த வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்கள், கப்பல் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் இந்திய கடற்படையினர் ஆகியோரின் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறியுள்ள பிரதமர் மோடி, வளைகுடா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் நாட்டின் வரலாற்றுத் தொடர்புகளை மீண்டும் நிலைநிறுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடலில் புத்தாண்டைக் கொண்டாடிய ஐஎன்எஸ்வி கௌண்டின்யா, உலகில் இரும்பு படகுகள் மற்றும் கடல் பயணத்துக்கான எந்த வழிகாட்டுதல் முறைகளும் கண்டுபிடிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்திய மாலுமிகளால் பயன்படுத்தப்பட்ட பாதைகளில் பயணித்தபடியே புத்தாண்டு வாழ்த்துக்களையம் புகைப்படங்களையும் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளது.
ஐஎன்எஸ்வி கௌண்டின்யாவின் கடல் பயணம், ஒரு காலத்தில் இந்தியாவை மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் இணைத்த கடல்வழிப் பாதைகளை மீண்டும் புதுப்பிக்கும் ஒரு முயற்சி என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
உண்மையில் ஐஎன்எஸ்வி கௌண்டின்யாவின் புது பயணம், பண்டைய பாரதத்தில் கடல்சார் பரப்பை வென்ற சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பாக குடியேறி ஆட்சி செய்த முன்னோருக்குச் செய்யும் பொருத்தமான அஞ்சலியாகும்.
கடல்களைக் கடப்பது, சில சமயங்களில் போரிடுவது, மற்றும் வெளிப்படையாகவே மக்களின் இதயங்களை வெல்வது என்பது தான் பரந்த உலகத்துடனான இந்தியாவின் உறவு என்பதே கௌண்டின்யாவின் வாழ்க்கை செய்தியாகும்.
















