சாதிப்பதற்கு வயதோ, பாலினமோ, குடும்ப சூழலோ ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து இந்தியாவின் முக்கியமான பெண் தொழிலதிபராக திகழ்கிறார் கனிகா டெக்ரிவால். இந்திய தொழில் துறையில் அவர் செய்த சாதனை என்ன?, அவர் குறித்த பேச்சுகள் தற்போது அதிகரித்திருப்பது ஏன்?
உலகம் முழுவதும் சுமார் 50 நாடுகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி, Shark Tank. இதில் பங்கேற்கும் தொழில்முனைவோர்கள் தங்களது புதிய வியாபார யோசனைகளை முன்வைக்க வேண்டும்.
அந்த யோசனை பிடித்திருக்கும் பட்சத்தில், நடுவர்களாக இருக்கும் முதலீட்டாளர்கள் அந்த யோசனையைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவார்கள். அல்லது அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் மற்ற முதலீட்டாளர்கள் நிதி வழங்க முன்வருவார்கள். இந்நிலையில், இந்தியாவில் நடத்தப்படும் Shark Tank நிகழ்ச்சியின், 5வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.
இதன் நடுவர் குழுவில் இந்திய அளவில் புகழ்பெற்ற பல தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவரான, கனிகா டெக்ரிவாலின் பின்னணியும், அவரது சாதனை பயணமும்தான் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 1990ஆம் ஆண்டு பிறந்த 90ஸ் கிட்தான், கனிகா டெக்ரிவால். 2011ம் ஆண்டு அவரது 21வது வயதில் Hodgkin’s Lymphoma என்ற ரத்த புற்றுநோய் ஏற்பட்டது.
இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய பகுதியான நிணநீர் மண்டலத்தைக் கடுமையாகப் பாதிக்கும் புற்றுநோயாகும். எனவே, 24 மணிநேரமும் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலைக்குக் கனிகா டெக்ரிவால் தள்ளப்பட்டார்.
மேலும், அடுத்த 9 மாதங்களுக்குக் கீமோ தெரபி எடுக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. அவருக்குச் சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், அவரது நோய் பாதிப்பு மோசமான நிலையை எட்டிவிட்டதாகவும், ஆகவே அவர் இன்னும் சில மாதங்கள் மட்டும்தான் உயிர்வாழ்வார் எனவும் தெரிவித்துவிட்டனர்.
அவரது வயதையொத்த மற்ற இளைஞர்களுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டிருந்தால், மனமுடைந்து போயிருப்பார்கள். ஆனால், கனிகா டெக்ரிவால் தன்னம்பிக்கையுடன் இருந்தார்.
அத்துடன், புற்றுநோய் ஏற்பட்ட அந்த நிலையிலும், விமான துறை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றை தொடங்க விரும்புவதாகத் தனது தந்தையிடம் தெரிவித்தார். மருத்துவமனையிலிருந்து சுமார் ஒரு வருட காலத்தைத் தனது ஸ்டார்ட்அப் நிறுவனம்குறித்த திட்டத்தை மேம்படுத்தப் பயன்படுத்திக்கொண்டார்.
ஒரு வருட சிகிச்சைக்குப் பின் புற்றுநோய் பாதிப்பிலிருந்து ஆச்சரியகரமாகக் கனிகா டெக்ரிவால் மீண்டு வந்தார்.
அதே கையோடு, ஸ்டார்ட்அப் நிறுவனம்குறித்த தனது கனவுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வேலையிலும் அவர் ஈடுபட்டார். ஸ்டார்ட் அப்நிறுவனம்குறித்த அவரது கனவு மிகப்பெரியதாக இருந்தது.
பொதுவாக யாரேனும் விமான பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால், விமானத்தில் பிற பயணிகளுடன் இணைந்துதான் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு மாற்றாக, விமானங்களைத் தனி பயன்பாட்டிற்கு வழங்கினால் எப்படி இருக்கும் எனக் கனிகா டெக்ரிவால் யோசித்தார்.
அதன் விளைவாக உருவானதுதான், JetSetGo நிறுவனம். வெறும் 5,600 ரூபாய் முதலீட்டில் அந்நிறுவனத்தை தொடங்கிய அவர், மேற்கொண்டு நிதி திரட்டப் பல்வேறு முதலீட்டாளர்களின் வீடுகளுக்கு ஏறி இறங்கினார்.
வெறும் 22 வயதே ஆகியிருந்ததாலும், பெண் என்பதாலும் அனைத்து இடங்களிலும் தானும், தனது யோசனையும் நிராகரிக்கப்பட்டதாகக் கனிகா டெக்ரிவால் தெரிவிக்கிறார்.
இருப்பினும், பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தேவையான நிதியைத் திரட்டி, விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் அவர் குத்தகைக்கு எடுத்தார்.
அவற்றைத் தேவைப்படும் தனிநபர்களுக்கு வாடகைக்கும் விடத் தொடங்கினார். எடுத்த எடுப்பிலேயே போதிய வரவேற்புகள் கிடைத்துவிடவில்லை.
இருந்தபோதும், தனது வியாபார யோசனையின் மீது கொண்ட நம்பிக்கையால், பின்வாங்காமல் JetSetGo நிறுவனத்தை நடத்தி வந்தார். இதன் பலனாக, வெறும் 5,600 ரூபாய் முதலீட்டில் தொழிலை தொடங்கிய கனிகா டெக்ரிவாலின் இன்றைய நிகர சொத்து மதிப்பு 420 கோடி ரூபாக உயர்ந்துள்ளது. அத்துடன், hurun நிறுவனம் அண்மையில் வெளியிட்ட இந்தியாவின் இளம் செல்வந்தர்கள் பட்டியலிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.
கார், பைக் போன்றவற்றை புக் செய்து பயன்படுத்துவதுபோன்று, விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் வாடகைக்கு விடுவதால், JetSetGo நிறுவனம் இந்திய விமான போக்குவரத்தின் ஊபர் என அழைக்கப்படுகிறது.
அத்துடன், விமான மேலாண்மை, விமான பராமரிப்பு, அவை குறித்த ஆலோசனைகளையும் அந்நிறுவனம் தற்போது வழங்கி வருகிறது. இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை JetSetGo விமானங்களை வாடகைக்கு விட்டுள்ளது.
அதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை பயணித்துள்ளனர். கேன்சர் போன்ற கடுமையான நோய்களோ, போதிய பணம் இல்லாத சூழ்நிலையோ, வயதோ, பாலினமோ இவை எதுவுமே, சாதிப்பதற்கு தடை இல்லை என்பதுதான், கனிகா டெக்ரிவாலின் வெற்றிப்பயணம் கூறும் செய்தி. இதன் காரணமாகதான், அவர் புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்கான Shark Tank நிகழ்ச்சியில் நடுவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இந்தியாவில் மேற்கொண்டு பல தொழில்முனைவோர்கள் உருவாக கனிகா டெக்ரிவால் நிச்சயமாக காரணமாக இருப்பார் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
















