திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் சந்தன கூடு விழாவை முன்னிட்டு கொடி கட்டிய நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில் தல விருச்சமரமான கல்லத்தி மரத்தில் கடந்த மாதம் 21ஆம் தேதி சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவிற்காக கொடியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, இது தொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது மலை மீது கல்லத்தி மரம் உள்ள இடம் கோயில் சொத்தா? தர்கா சொத்தா? என கேள்வி எழுப்பிய நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், இது குறித்து தர்கா நிர்வாகம் மீது கோயில் நிர்வாகம் புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலக உள்துறை கண்காணிப்பாளரின் அனுமதியின்றி சந்தனக்கூடு கொடியேற்றம் நடைபெற்றுள்ளதாகவும், கல்லத்தி மரத்தில் ஏற்றப்பட்ட கொடியை உடனே இறக்க வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் திருப்பரம்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதேபோல், கல்லத்தி மரத்தில் கொடியேற்றிய தர்கா நிர்வாகம், அறங்காவலர் குழு, காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி ராம.ரவிக்குமாரும் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கோயில் உள்துறை கண்காணிப்பாளர் சத்தியசீலன் கொடுத்த புகாரின் அடிப்படையில், பெயர் குறிப்பிடப்படாமல் சில நபர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















