இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பது தொடர்பான முடிவை வரும் 21ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என வங்கதேச அணிக்கு ஐசிசி கெடு விதித்துள்ளது.
ஐபிஎல் 2026 ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை, பிசிசிஐ-யின் அறிவுறுத்தலின் பேரில் அந்த அணி விடுவித்தது.
இது வங்கதேச அரசு மற்றும் கிரிக்கெட் வாரியத்திற்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியாவில் நிலவும் பாதுகாப்பு தொடர்பான சூழல் தங்களுக்கு சாதகமாக இல்லை என்றும் தங்கள் அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு, டிக்கெட் விற்பனை மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் முடிந்துவிட்டதால், போட்டிகளை மாற்ற முடியாது என ஐசிசி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
வங்கதேசம் இந்தியா வர மறுத்தால், அவர்கள் விளையாட வேண்டிய போட்டிகளுக்கான புள்ளிகளை இழக்க நேரிடும் என்றும், 21ம் தேதிக்குள் முடிவை தெரிவிக்காவிட்டால் தொடரில் இருந்து வங்கதேச அணி நீக்கப்படும் எனவும் ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
















