மத்தியப்பிரதேசத்தில் உரிமையாளர் எழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் தகன மேடையில் காத்திருந்த நாயின் வீடியோ வெளியாகி காண்போரை கலங்கச் செய்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள படோரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பிரஜாபதி. இவர் தனது வளர்ப்பு நாயின் முன்னிலையிலேயே வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜகதீஷின் உடலை பிரிய மனமில்லாமல் அவரது வளர்ப்பு நாயும் உடன் சென்றுள்ளது. பின்னர் ஜகதீஷின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், தனது எஜமானர் எழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் அங்கேயே அவரது வளர்ப்பு நாயும் காத்துக் கிடந்தது.

ஜகதீஷ் இறந்தது முதல் அவரது வளர்ப்பு நாய் எதுவும் உண்ணாமல், தண்ணீரும் குடிக்காமல் தன்னை தானே வருத்திக் கொள்வதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
முகத்திற்கு முன் சிரித்து பேசிவிட்டு பின்னர் புறம் பேசும் மனிதர்களை விட, நன்றியுணர்வுள்ள வாயில்லாத ஜீவன்களே மேலானது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















