மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கோவை தொழில்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது… அவர்கள் எதிர்ப்பார்ப்பது என்ன என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்….
பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் 7 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆய்வறிக்கை அளிக்கப்பட்டுள்ளது…
அதில் குறிப்பாக, பிரதமரின் “சூரிய கிரண்” திட்டத்தைப் போன்று, ரூஃப்டாப் சோலார் திட்டத்திற்கு 25 சதவிகிதம் மானியம் வழங்க வேண்டும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் இலக்குகளை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கும் என்கிறார் கொடிசியா தலைவர் கார்த்திக்கேயன்.
CGTMSE திட்டத்தின் கீழ் உற்பத்தித் துறைக்கு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், 25 கோடி ரூபாய் வரை 100% கடன் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் 75% உத்தரவாதம் மட்டுமே வழங்கப்படுவதால் வங்கிகள் தயக்கம் காட்டுவதாகவும், இது உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை நேரடியாக பாதிப்பதாகவும் கூறுகிறார்.
‘பவர் டெக்ஸ் இந்தியா’ திட்டத்தின் கீழ் சாதாரண விசைத்தறிகளை நவீன விசைத்தறிகளாகவும், ரேப்பியர் தறிகளாகவும் மாற்ற மத்திய அரசு வழங்கி வந்த மானியம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இதுவரை சுமார் 50 சதவீத விசைத்தறிகள் மட்டுமே நவீனமயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பூபதி .
தமிழகத்தில் விசைத்தறிகளுக்கான மின் கட்டணம் சமீப காலமாக அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால், விசைத்தறியாளர்கள் கடும் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, விசைத்தறிக் கூடங்களில் சோலார் பேனல்கள் அமைப்பதற்கு மத்திய அரசு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, வரும் மத்திய பட்ஜெட்டில் ‘பவர் டெக்ஸ் இந்தியா’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினால் அதன்மூலம் விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது…
















