மக்களவையில் நிலவிய கடும் அமளிக்கு இடையே, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் விதிமுறைகளுக்கு எதிரானது என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் அமைச்சர்கள் பதிலளித்துக்கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதனை சுட்டிக்காட்டிய சபாநாயகர், டி.ஆர்.பாலு போன்ற மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களே, அமைச்சர் பேசும்போது எழுந்து நின்று கூச்சலிடுவது முறையல்ல என தெரிவித்தார்.
தொடர்ந்து, அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் சபையின் கண்ணியத்தை காக்காமல், குறுக்கீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, அவைக்குள் பதாகைகளை காட்டுவதும், விவாதங்களின் போது கூச்சலிட்டு இடையூறு செய்வதும் சட்ட விரோதமானது எனவும் எச்சரித்தார்.
மேலும், அவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்படும் உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என எச்சரித்த ஓம் பிர்லா, எதிர்க்கட்சிகள் ஜனநாயகப் பண்புடன் விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
















