மதுரையில் 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள விஸ்வாஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சீத்தாராமன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி என்பவர் மோசடியான வழியில் தன்னை ஏமாற்றி 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மனைகளை கிரையம் செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அமைச்சரின் உதவியாளர் பொறுப்பிலிருந்து ஜெய்பாலாஜி விலகினார்.
இந்நிலையில் ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி ஆகிய இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கைது செய்து மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
















