இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம், மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில, அமெரிக்கா உடனான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றும், அடுத்த 5 நாட்களில் இது தொடர்பான கூட்டறிக்கையை இறுதி செய்து, இருதரப்பினரும் கையெழுத்திடவுள்ளதாகவும் கூறினார்.
கூட்டறிக்கை கையெழுத்தான ஓரிரு நாட்களில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தகம் தொடர்பான அரசாணையை பிறப்பிபார் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாணை பிறப்பித்த பின்பு இந்திய பொருட்களுக்கு தற்போது 50 சதவீதமாக இருக்கும் வரியை அமெரிக்கா 18 சதவீதமாக குறைக்கும் என்றும், இதன்பின், சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை தயார் செய்ய ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் ஆகலாம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், வரும் மார்ச் மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் சட்டப்பூர்வ ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஜிசிசி எனும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சை துவங்குவதற்கான வழிகாட்டு விதிகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக பியூஷ் கோயல் கூறினார்.
ஜிசிசிக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் பயனளிக்கும் என்றும், ஜி.சி.சி., நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வசித்து, பணியாற்றி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
















