வங்கதேச தலைநகர் டாக்காவில் மீண்டும் கலவரம் வெடித்ததால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் மாளிகை சூறையாடப்பட்டதால் பாதுகாப்புக் கருதி அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். பின்னர் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், மாணவர் அமைப்பின் தலைவரான உஸ்மான் ஹாடி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இதற்கு நீதிகேட்டு அடிக்கடி போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், டாக்காவில் மீண்டும் வன்முறை வெடித்தது. உஸ்மான் ஹாடியின் கொலையை ஏன் அதிகாரிகள் தடுக்கவில்லை என்றும், காவல்துறையினர் தாமதமாக வந்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியபடி போராட்டக்காரர்கள் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கற்கள் மற்றும் வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் அனைவரும் பதறியடித்து ஓடினர். இதனால் டாக்காவில் மீண்டும் அசாதாரண சூழல் நிலவுகிறது.
















