பொன்னேரி அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி கொலை செய்த கணவன், கல்லூரி மாணவியுடன் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த அத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கௌசல்யா, பொன்னேரியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட். இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, கௌசல்யாவிற்கும் அவரது அத்தை மகனும், கொத்தனார் வேலை செய்து வருபவருமான ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. சம்பவத்தன்று, வேலைக்குச் சென்றிருந்த ராஜேஷ், தனது மனைவி கௌசல்யா வீட்டில் தவறி விழுந்து காயமடைந்ததாகக் கூறி, அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு கௌசல்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கௌசல்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பொன்னேரி போலீசார் ராஜேஷைப் பிடித்து விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் எதுவும் தெரியாது என மறுத்து வந்த ராஜேஷ், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.கொலைக்கு உடந்தையாக இருந்த கல்லூரி மாணவி தீபிகா மற்றும் கணவர் ராஜேஷ் ஆகிய இருவரையும் பொன்னேரி போலீசார் கைது செய்தனர்.
















