இந்தியாவும் அமெரிக்காவும் சனிக்கிழமை வெளியிட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான இடைக்கால கட்டமைப்பில் உலர்ந்த காய்ச்சி வடிகட்டிய தானியங்களுக்கு இந்தியா ஒரு சதவீத வரி சலுகையை அறிவித்துள்ளது. இதில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இருக்காது என்றும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அறிவித்தார்.
இதனையடுத்து இருநாடுகளும் இடைக்கால வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கையை வெளியிட்டனர். இதில் , உலர்ந்த காய்ச்சி வடிகட்டிய தானியங்களுக்கு ஒதுக்கீட்டு அடிப்படையில் நாட்டின் மொத்த நுகர்வில் வெறும் 1 சதவீதத்துக்கு இந்தியா வரிச் சலுகையை அளித்துள்ளது.
மக்கள் தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் வருமானம் காரணமாக நாட்டின் கால்நடைப் பொருட்களுக்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக 200 லட்சம் டன்கள் மக்காச்சோளமும், 65 லட்சம் டன்கள் கோதுமையும் மற்றும் 62 லட்சம் டன்கள் சோயாபீன் மாவும் தேவைபடுகிறது. இவை நாட்டின் மொத்த கால்நடைத் தீவனத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளன.
தேவைகள் ஒருபுறம் அதிகரித்துவரும் நிலையில், குறைந்த சாகுபடி நிலம் மற்றும் உற்பத்தித்திறன் இடைவெளிகளால் உள்நாட்டுத் தீவன விநியோகத்தில் தடை ஏற்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, நாட்டில் உள்நாட்டு கால்நடைத் தீவன நுகர்வு சுமார் 500 லட்சம் டன்களாக உள்ளது. இதில் 5 லட்சம் டன்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கால்நடை தீவனத்துக்காகப் பயன்படுத்தப்படும் மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் இறக்குமதிக்கான தேவையைக் குறைக்கவும் கோழிப்பண்ணை, பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு உதவவும், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த இறக்குமதி பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.
2030-ல் உள்நாட்டு விநியோகத்தை விட கால்நடை தீவனத் தேவை வேகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே உள்நாட்டு விலை அழுத்தங்கள் காரணமாக, 2021 ஆம் ஆண்டில் 15 லட்சம் டன் சோயாபீன் தீவனத்தை இந்தியா இறக்குமதி செய்தது.
மேலும், இலங்கை, சீனா, அமெரிக்கா, தாய்லாந்து, மற்றும் நேபாளத்தில் இருந்து 6 லட்சம் டன்களுக்கும் அதிகமான கால்நடைத் தீவனத்தையும் நைஜர், டோகோ, பெனின், மற்றும் மொசாம்பிக்கில் இருந்து 6 லட்சம் டன்கள் சோயாபீன்ஸையும், மியான்மர், உக்ரைன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளிலிருந்து 9 லட்சம் டன் மக்காச்சோளத்தையும் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
அமெரிக்காவுக்கான ஒரு சதவீத வரி சலுகை என்பது உள்நாட்டு கால்நடைத் தீவன விநியோகத்தை ஈடுசெய்யும் என்றும், மக்கள் நுகர்வுக்கான உணவு தானியங்களைத் திசைதிருப்பாமல் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
















