சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இருவர் மயக்கமடைந்தனர்.
காலமுறை ஊதியம் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சிவகங்கையில் கடந்த 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலகம் எதிரே 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் திரண்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதில், அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உட்பட இருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, மயக்கமடைந்த அங்கன்வாடி ஊழியர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களே சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். மயக்கமடைந்த ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்க கூட மருத்துவர்கள் இல்லாமல் அரசு மருத்துவமனை செயல்படுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக செல்ல 800-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முயன்றனர். இதனையடுத்து போலீசார் அனுமதி மறுத்த நிலையில், சாலை ஓரத்தில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
ஈரோட்டில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, திமுகவுக்கு எதிராக ஊர்வலகமாகவும் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டார் பேரணியில் ஈடுபட முயன்றனர். அப்பொழுது காவல்துறையினர் அவர்களுக்கு அனுமதி மறுத்ததால், அந்த இடத்திலேயே நின்றபடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
















