நேபாளத்தில் இந்து மன்னர் ஞானேந்திர ஷாவின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என வலுவான குரல் ஒலிக்க தொடங்கியிருக்கிறது. மார்ச் 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் உள்ள நிலையில், மீண்டும் மன்னராட்சிக்கு ஆதரவு பெருக தொடங்கியிருக்கிறது.
நமது அண்டை நாடான நேபாளத்திற்கு, ஜனநாயகம் என்பது மிகவும் புதிது. 2008-ம் ஆண்டு மே 28-ஆம் தேதி நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, கூட்டாட்சி ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 240 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து நேபாளம் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்ந்தது.
இதன் பிறகு மன்னர் ஞானேந்திர ஷாவும் அவரது குடும்பமும் பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தனர். ஆனால், Gen Z தலைமுறையினர், சர்மா ஒலி அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்திற்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறத்தொடங்கியது. குறிப்பாக, மன்னராட்சி மீண்டும் வர வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியது. தனக்கான ஆதரவு பெருகி வருவதை உணர்ந்த ஞானேந்திர ஷா, மீண்டும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார்.
இதனிடையே, நேபாளத்தில் வரும் மார்ச் 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே மன்னராட்சியை அமல்படுத்தி விட வேண்டும் என ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.
தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவான் சர்வதேச விமான நிலையத்திற்கு ஞானேந்திர ஷா வந்து இறங்கியதும், அவரது ஆதரவாளர்கள் எழுப்பிய முழக்கம், மன்னராட்சிக்கு அடித்தளமிட்டிருப்பதை பார்க்க முடிகிறது. நேபாளத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், மீண்டும் மன்னராட்சி மலர வேண்டும் என அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் ஆளும் அரசை கதி கலங்க செய்துள்ளது.
இதனிடையே நேபாள பிரதமர் சுசிலா கார்க்கி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பில், பொதுத்தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்குமாறு கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுவது தேர்தல் நடைமுறைதான் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். பொதுத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு மீண்டும் அதிகாரத்திற்கு வர விருப்பம் இல்லை. அவருக்கும் அதிகாரத்தை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்க தான் செய்திறது. அதன் காரணமாகவே மன்னராட்சிக்காக குரல் கொடுக்கும் போராட்டக்குழுக்களுக்கு அவர் ஆதரவு வழங்குவதை பார்க்க முடிகிறது. இதையெல்லாம் கணக்கிட்டு பார்த்தால் மார்ச் 5-க்கு பிறகு ஆளும் அரசு தொடருமா அல்லது மன்னராட்சி மலருமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
















