சேலத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில், தமிழகத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்நிலையில், மகா சிவராத்திரியையொட்டி, அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பங்கேற்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மகாசிவராத்திரி திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை இராமநாதசுவாமி ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளுக்கு நாயக்கர் வாசலில் சிறப்பு தீபாராதனை நடைபெற்று, பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிதிருத்தேரில் சுவாமி , அம்பாள் நான்கு ரத வீதியில் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கோவை அன்னூர் மண்ணீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முதல் கால பூஜையுடன் தொடங்கிய மகா சிவராத்திரி நிகழ்ச்சியில், மண்ணீஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள், மலர்கள் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு “அமர்நாத்” பனி லிங்கம் போல பனிக்கட்டியால் செய்யப்பட்ட 6 அடி சிவலிங்கம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது… பாஜக சார்பில் நடத்தப்பட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
உலகின் முதல் சுயம்பு லிங்கத் தலமாகப் போற்றப்படும் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில், இந்த ஆண்டு மஹா சிவராத்திரி விழா, முன் எப்போதும் இல்லாத வகையில் மிகுந்த உற்சாகத்துடனும், பக்திப் பெருக்குடனும் நடைபெற்றன. இந்து பக்தர்களுடன் இணைந்து இஸ்லாமியர்களும் கோயிலை வலம் வந்து தரிசனம் செய்தனர்.
மகாசிவராத்திரியையொட்டி திருச்சி கூத்தைப்பார் மஹாகாளீஸ்வரி ஆலயத்தில் உள்ள 61 அடி உயர சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தமிழகத்திலேயே மிக உயரமான இந்த சிவலிங்கத்திற்கு ஆயிரம் லிட்டர் பால் மற்றும் பலவகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் ஆட்சியரகம் அருகே உள்ள குரு முத்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயிலில் உள்ள 41 அடி உயர ராஜலிங்கத்திற்கு ராட்சத கிரேன் மூலம் 1008 லிட்டர் பாலால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி சிவபெருமானை வழிபட்டனர்.
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடியதை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரியையொட்டி நடைபெற்ற சிவாலய ஓட்டத்தில் ரஷ்ய நாட்டு பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திக்குறிச்சி மஹா தேவர் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த அவர்கள், அனைத்து சந்நிதானங்களிலும் வழிபாடு மேற்கொண்டனர். இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், கோயில்களுக்கு செல்லும்போது நேர்மறையான ஆற்றல் கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சிவகாம சுந்தரி உடனுறை நடராஜ பெருமானை திரளான பக்தர்கள் மனமுருகி வழிபாடு செய்தனர்.
















