தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் குழந்தைகள், பெண்கள் சாலையில் அச்சத்துடன் நடமாடும் நிலை அதிகரித்து வருகிறது. நாய் தொல்லையை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது
தமிழ்நாட்டில் தெருநாய்களால் குழந்தைகள், பெரியவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகின்றன… திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலும் நிலைமை இதுதான்.. சர்வதேச சுற்றுலா தளமான இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் தெருநாய்க்கடிக்கு ஆளாகும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன…
நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்டோர் தெரு நாய்க்கடிக்கு ஆளாகும் நிலை உருவாகிவிட்டதாக கூறும் பொதுமக்கள், நாய்க்கடிக்கு ஆளான குழந்தைகள், பெரியவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
கொடைக்கானல் பேருந்து நிலையம், ஏரி சாலை, அட்டுவம்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி போன்ற பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகவே காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்… தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கு கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார்கள் கொடைக்கானல் வாசிகள்..
















