மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இரு நாடுகள் இடையே 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிகேட் உடன் இந்தியா வந்துள்ளார். 3 நாள் பயணமாக இந்தியா வந்த அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் மஹாராஷ்டிரா லோக்பவனில் பிரதமர் மோடியை, சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஏஐ துறை, வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள், பாதுகாப்பு மற்றும் இரு நாட்டு உறவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து, பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வருகையையொட்டி மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவில் லேசர் ஷோ நடைபெற்றது. இமானுவேல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வரவேற்கும் விதமாக மும்பையின் பிரபலமான கேட் வே ஆப் இந்தியா சின்னத்தின் மீது கண்கவர் லேசர் ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரு நாடுகளின் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற லேசர் ஷோவை பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் இருநாட்டு உயர் அதிகாரிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இதனிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மும்பையில் பாலிவுட் திரையுலகினரை சந்தித்தார். நடிகர்கள் அனில் கபூர், மனோஜ் பாஜ்பாய், இயக்குனர்கள் சோயா அக்தர், நீரஜ் கெய்வான், கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ் உள்ளிட்டோரை அவர் சந்தித்து உரையாடினார்.
















