வீட்டில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பழைய ஸ்மார்ட் போன்களில் இருக்கும் அரிய கனிமங்கள், எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விமானங்களை உருவாக்க உதவும் வளமாக மாறலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…
பழுதான பழைய ஸ்மார்ட் போன்களை நாம் சாதாரண மின்கழிவாக எண்ணி வீட்டின் அலமாரிகளில் தூசிபட வைத்திருப்போம். ஆனால், அந்த சாதனங்களுக்குள் இந்தியாவின் எதிர்கால விமான மற்றும் பாதுகாப்புத் துறைக்கு தேவையான முக்கிய கனிமங்கள் மறைந்து கிடக்கின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும்..? உலக நாடுகள் அனைத்தும் அரிய கனிமங்களுக்கான சுரங்கங்களை வலைவீசித் தேடும் நேரத்தில், இந்தியாவில் ஏற்கனவே கோடிக்கணக்கான பயன்படுத்தப்படாத ஸ்மார்ட் போன்கள் ஒரு “நகர்ப்புற கனிம சுரங்கம்” போல கொட்டிக் கிடப்பது ஆகச்சிறந்த வளம் அல்லவா?
சாதாரண சுரங்கங்களில் ஒரு டன் கல்லிலிருந்து சில கிலோ அளவில்தான் கோபால்ட் போன்ற கனிமங்கள் கிடைக்கும். ஆனால் பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட பேட்டரிகளில் அதே அளவிலான பொருட்கள் பல மடங்கு அதிக சுருக்கத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது குறித்து விளக்கும் அவர்கள் மின்கழிவுகள் என்பது வெறும் குப்பைகள் அல்ல எனவும், அவை மனிதர்கள் உருவாக்கிய மிகச் செறிந்த கனிம வளம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்த கனிமங்களை மீட்டெடுக்கும் செயல்முறை பாரம்பரிய உலோக உருக்கம் போல மேற்கொள்ளப்படாது. பழைய லித்தியம் – அயன் பேட்டரிகளைச் சிதைப்பதன் மூலம் “பிளாக் மாஸ்” எனப்படும் கரும்பொடி உருவாக்கப்படுகிறது. பின்னர் அதிலிருந்து லித்தியம், நிக்கல், கோபால்ட் போன்ற உலோகங்கள் வேதியியல் முறைகளால் தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் அமில கரைசல் முறையைப் பயன்படுத்த, மற்ற நிறுவனங்கள் வெப்ப மற்றும் வேதியியல் மாற்றங்களை பயன்படுத்தி சுற்றுச் சூழலுக்கு குறைந்த பாதிப்பு ஏற்படும் வகையில் அந்த கனிமங்களை மீட்டெடுக்க முயல்கின்றனர்.
விமானங்கள் மற்றும் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த காந்தங்கள், சென்சார்கள், இஞ்சின் கூறுகள் போன்றவை இந்த அரிய உலோகங்களையே சார்ந்திருக்கின்றன. இவை மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும். 99.9% தூய்மை போதுமானது போல தோன்றினாலும், மீதமுள்ள 0.1% கலப்பு கூட அதிக வெப்பம், அதிர்வு போன்ற சூழல்களில் உலோகத்தின் வலிமையை பாதித்து விபத்துக்கு வழிவகுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவற்றில் பயன்படுத்தப்படும் காந்தங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர, அவற்றை 900°C வரை சூடாக்கி அதன் உள் அமைப்பை மீள் சீரமைக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், வெப்பநிலை கட்டுப்பாடு மிகத் துல்லியமாக இல்லையெனில் அவை பயனற்ற தூளாக மாறும் அபாயமும் இதில் உள்ளது. மேலும், ஜெட் எஞ்சின் வெப்பத்தையும் தாங்குவதற்கு டிஸ்ப்ரோசியம் போன்ற கூடுதல் மூலப்பொருட்களும் தேவைப்படுகிறது.
எத்தனையோ அறிவியல் திறன் இருந்தும், மறுசுழற்சி செய்யப்பட்ட இந்த கனிமங்களை இறுதி தயாரிப்புகளாக மாற்றும் உள்நாட்டு தொழிற்சாலை அமைப்புகள் இல்லாதது இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. தற்போதுவரை பேட்டரிகள் சிதைக்கப்பட்டு கிடைக்கும் “பிளாக் மாஸ்” பெரும்பாலும் வெளிநாடுகளுக்கே அனுப்பப்படுகிறது. அதாவது, மூலப்பொருள் இந்தியாவில் இருந்து வந்தாலும், அதனால் உருவாகும் உயர்மதிப்பு தயாரிப்புகள் வெளிநாடுகளில் தான் உருவாகின்றன.
இதுகுறித்து கவலை தெரிவிக்கும் துறை சார்ந்த நிபுணர்கள், உண்மையான தன்னிறைவு என்பது கனிமங்களை மீட்டெடுப்பதில் முடிவடையாது எனவும், அவற்றை சுத்திகரித்து, உற்பத்தி செய்து, விமானம் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை முழு மதிப்புச் சங்கிலியையும் நாட்டுக்குள் உருவாக்கும் திறனில் தான் உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர். அந்த தொழில்துறை பலம் நம் நாட்டில் உருவாகும் நாளில், பழைய ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் நாளைய விமானங்களாக மாறும் என்பதில் மாற்றமில்லை.
















