சென்னையில், ஆன்லைன் செயலி மூலம் டெலிவரி செய்யப்பட்ட காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட 10 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஓமனா என்பவர், தனது பேத்திக்கு BLINKIT ஆன்லைன் செயலி மூலம் சாக்லேட்டை ஆர்டர் செய்துள்ளார்.
ஆயிரத்து 199 ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் எடை கொண்ட அந்த சாக்லேட்டின் விலையில் தள்ளுபடி வழங்கப்பட்டு, 908 ரூபாய் 50 காசு விலையில் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டது.
சாக்லேட்டை சாப்பிட்ட சிறுமி வாந்தி எடுத்து வயிற்று வலியால் துடித்த நிலையில், சாக்லேட்டின் நிறம் வழக்கத்திற்கு மாறாக இருந்ததால் சந்தேகமடைந்த ஓமனா, சாக்லேட் பாக்ஸை திறந்து பார்த்தபோது, அது கடந்த 3ம் தேதியுடன் காலாவதியானது தெரியவந்தது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளித்த நிலையில், BLINKIT வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தபோது, வேறு சாக்லேட்டை மாற்றித் தருவதாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அம்பத்தூரில் உள்ள BLINKIT கிடங்கில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பாதிக்கப்பட்டவரின் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















