“அனைவருக்கும் ஐஐடி” என்ற நோக்கத்துடன் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்ட இளங்கலை பட்டப்படிப்புகள், கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்கி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது பற்றி சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
ஒரு காலத்தில் ஐஐடி-யில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற பெருங்கனவு பலருக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் தற்போது சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், கிராமப்புற இளைஞர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என அனைவரும் அந்த கனவை நிஜமாக்கிக்கொள்ள சென்னை ஐஐடி வாய்ப்பு வழங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற எண்ணத்துடன் சென்னை ஐஐடி நிர்வாகம் முன்னெடுத்த முயற்சி, பலரின் வாழ்க்கையில் கல்வி மூலம் மாற்றத்தை உருவாக்கும் மனிதநேய பயணமாக மாறியுள்ளது.
குறிப்பாக “அனைவருக்கும் ஐஐடி” என்ற நோக்கத்துடன், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சென்னை ஐஐடி-யில் தொடங்கப்பட்ட இளங்கலை பட்டப்படிப்புகள், இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கி வருகிறது. இந்த மாற்றியமைக்கப்பட்ட மற்றும் ஆன்லைன் கல்வி திட்டங்களின் மூலம், இதுவரை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. வசதி, வயது, நேரம் ஆகிய கட்டுப்பாடுகளின்றி, யார் வேண்டுமானாலும் இதில் சேர முடியும் என்பதே இந்த திட்டத்தின் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.
தற்போதைய ஏஐ யுகத்தில், கணிதம், தரவுகள், தொழில்நுட்ப மேலாண்மை, செமிகண்டக்டர் தொழில்நுட்பம், ஏரோஸ்பேஸ் போன்ற துறைகள் மிக முக்கியமானதாக உருவெடுத்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு, ஏற்கனவே ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி, எலக்ட்ரானிக் சிஸ்டம், டேட்டா சயின்ஸ் போன்ற இளங்கலை பட்டப்படிப்புகளை வெற்றிகரமாக நடத்தி வரும் சென்னை ஐஐடி, தற்போது மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் என்ற புதிய இளங்கலை பட்டப்படிப்பையும் தொடங்கியுள்ளது.
இந்த படிப்புகள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவிக்கிறது. 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல், தற்போது கல்லூரியில் பயிலும் மாணவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் இதில் சேர முடியும். அதற்கு ஐஐடி நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே போதுமானது என்பதால், ஏராளமானோர் போட்டிபோட்டுக்கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் இந்த திட்டத்தின் கீழ் ஸ்காலர்ஷிப் வசதி வழங்கப்படுவதும் மாணவர்களுக்கு கூடுதல் ஊக்கம் அளிக்கிறது.
இந்த இளங்கலை மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் பட்டப்படிப்பு, உற்பத்தி துறை, வங்கி, இ-காமர்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என ஐஐடி பேராசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உன்னத பாரதம் அபியான் திட்டத்தின் கீழ், கிராமப்புற மாணவர்களை தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், தொழில் முனைவோர்களாகவும் உருவாக்கும் நோக்கில் இந்த இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி விளக்கமளித்துள்ளது.
















