கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக்கூறி, பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுண்டக்காபட்டி கிராமத்தில் சுமார் 274 நாட்களில் சிமெண்ட் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் பெண்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டியிருந்தது.
இந்நிலையில், நவீன இயந்திரங்களைக் கொண்டு மிகக் குறுகிய காலத்திலேயே சாலைப் பணிகள் முடிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு நாளைக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலியாக 336 ரூபாய் வழங்கப்பட வேண்டிய நிலையில், 6 நாட்கள் வேலை செய்த 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 300 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சுண்டக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 500 பெண்களுக்குத் தொடர்ந்து வேலை வழங்காமல் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
தங்களுக்கு நியாயமான கூலியை தராமல் ஏமாற்றுவதாகவும், இயந்திரங்களை வைத்து வேலையை முடித்துவிட்டு தங்களை வஞ்சிப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டினர்.
இந்த முறைகேட்டைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
















