சேலம் பால் மார்க்கெட்டில் காலங்காலமாக கடை வைத்து நடத்திய வியாபாரிகளை திமுகவினர் சூழ்ச்சி செய்து வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பராமரிப்பு என்ற போர்வையில் பழைய கடைகளை அகற்றி, புதிய கடைகளை ஆக்கிரமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்…
சேலம் செவ்வாய் பேட்டையில் 1962ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது பழமையான சத்திரம் பால் மார்க்கெட்… இங்கு 185 நிரந்தர கடைகள், 65 தற்காலிக கடைகள் என மொத்தம் 250-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த சூழலில் பால் மார்க்கெட்டில் உள்ள கடைகளை சீரமைப்பதாகக் கூறி 5 கோடி நிதி ஒதுக்கிய சேலம் மாநகராட்சி, கடைகளை இடித்து அகற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், பராமரிப்பு பணி என்ற போர்வையில் பூமி பூஜைக்கு வந்த அமைச்சர் ராஜேந்திரனை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பினர்.
வியாபாரிகளின் எதிர்ப்பால் தொடர்ச்சியாக பால் மார்க்கெட் அருகே 40 தற்காலிக கடைகளை அமைக்க சேலம் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. அதற்கான பணிகள் 40 சதவிகிதம் மட்டுமே முடிந்த நிலையில், பால் மார்க்கெட்டில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்பந்திப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
மராமத்து என்று பணிகளை துவக்கிய மாநகராட்சியும், ஆளுங்கட்சியினரும் முழுமையாக கடைகளை இடித்து தள்ள முடிவு செய்துள்ளதாகவும், ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு கடைகளை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
பால் மார்க்கெட்டில் 250 கடைகள் உள்ள நிலையில், 40 தற்காலிக கடைகள் மட்டும் அமைத்துவிட்டு, தங்களை வெளியேற்ற மாநகராட்சி வற்புறுத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
சேலம் வஉசி பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளை ஆக்கிரமித்தது போல் பால் மார்க்கெட்டிலும் கடைகளை ஆக்கிரமிக்க ஆளும் கட்சியினர் திட்டமிட்டு இருப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு, பழைய மார்க்கெட்டில் காலங்காலமாக கடை அமைத்திருந்த வியாபாரிகளுக்கே, புதிதாக கட்டப்படும் கடைகள் ஒதுக்கப்படும் என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். கடைகளை ஆக்கிரமிக்க முனைப்பு காட்டும் திமுகவினரை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் வியாபாரிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.
















