நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நுழைந்த ஒரு கும்பல், கடந்த 2ம் தேதி சாலையில் சென்றவர்களை, சாதி பெருமைக்காக அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது.
இதில், ஒடிசாவைச் சேர்ந்த திரிநாத் கட்டா மற்றும் ஜான் மார்க் ஆகிய 2 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய கண்ணன், அந்தோணி மைக்கேல், சுபாஷ், கல்யாணி, உச்சிமாகாளி, வசந்தகுமார், ராஜா ஆகிய 7 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும், இதில் தொடர்புடைய மகாராஜன் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் நாங்குநேரி இரட்டைக் கொலை சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
இந்த கொடூர வழக்கில் தொடர்புடைய மேலும் சில நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அனைவரையும் கைது செய்யும் வரை ஜான் மார்க்கின் உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் தொடர்ந்து 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
















