ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா லேசர் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த ஆயுதங்கள் குறித்தும், அவற்றின் துல்லிய தன்மை குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஈரான் உடனான போரில் THAAD, Patriot போன்ற ஏவுகணை தடுப்பு அமைப்புகளையும், ‘ஸ்டெல்த்’ (Stealth) ரக போர் விமானங்களையும், SM-3 ஏவுகணைகளையும் அமெரிக்கா அதிகளவில் பயன்படுத்தி வருகிறது. மேலும், நிலத்திற்கு அடியில் உள்ள இலக்குகளை தாக்க 30,000 பவுண்டு எடையுள்ள Bunker Buster-களையும், ஏவுகணை ஏவுதளங்களை கண்காணிக்க Space Force அமைப்பையும் உபயோகப்படுத்தி வருகிறது.
இந்த சூழலில், ஈரானின் தாக்குதல்களை முறியடிக்க லேசர் ஆயுதங்களையும் அமெரிக்கா தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளது. இது தொடர்பான வீடியோவை அந்நாட்டின் கடற்படை வெளியிட்டுள்ளது. அதில், HELIOS எனப்படும் அதிநவீன லேசர் ஆயுத அமைப்பின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த HELIOS அமைப்பானது, அதிகபட்சமாக 120 கிலோவாட் வரை அதிக ஆற்றல் கொண்ட லேசர் கற்றைகளை வெளியிடும். அந்த லேசர் ஒளியை எதிர்கொள்ளும் எதிாி நாடுகளின் ட்ரோன்கள், சிறிய ரக படகுகள் உள்ளிட்டவை நொடிப்பொழுதில் உருகி விடும் அல்லது எரிந்து சாம்பலாகி விடும்.
அத்துடன், தாக்க வரும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மீதும், சென்சார்கள் மீதும் இந்த லேசர் அமைப்பு அதிகப்படியான ஒளியை செலுத்தும். இதனால், ட்ரோன்களும், ஏவுகணைகளும் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவே செயலிழக்கும் சூழலுக்கு தள்ளப்படும்.
HELIOS லேசர்கள் சிறந்த கண்காணிப்பு அமைப்பாகவும் விளங்குகின்றன. இவற்றை பயன்படுத்தி தொலைதூரத்தில் உள்ள எதிர்படைகளின் நடமாட்டத்தையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். ஒரு ஏவுகணையை வாங்க பல கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், இந்த லேசர் தாக்குதலை நடத்த ஒரு சில டாலர்கள் இருந்தாலே போதும். மின்சார சேமிப்பு இருக்கும்வரை, தொடர்ந்து லேசர் தாக்குதல்களை நடத்திகொண்டே இருக்கலாம். இதனால், அமெரிக்காவுக்கு பல லட்சம் டாலர்கள் மிச்சமாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த லேசர்கள் ஒளியின் வேகத்தில் பயணிப்பதால், இலக்குகளை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தாக்கி அழிக்கின்றன. கடந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க கடற்படை இந்த HELIOS லேசர் அமைப்பை கொண்டு பரிசோதனை ஒன்றை மேற்கொண்டது. கடல் பகுதியில் நடத்தப்பட்ட அந்த சோதனையின்போது ஒரே நேரத்தில் 4 ட்ரோன்களை லேசர் கதிர்வீச்சு தாக்கி அழித்தது. இது லேசர் ஆயுதங்களின் சோதனையில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்பட்டது.
இந்த சூழலில்தான், ஈரானுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதங்களை அமெரிக்கா கையில் எடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக பேராசிரியரான டேவிட் ஜியார்னிக், ஈரானின் ஏவுகணைகளை கண்டறியவும், அவற்றை வழிமறித்து அழிக்கவும் இந்த லேசர் தாக்குதல் முக்கிய பங்கு வகித்து வருவதாக கூறியுள்ளார்.
ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவையாக லேசர் ஆயுதங்கள் உருவெடுத்துள்ளது ஒரு புரட்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















