சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
மடப்புரம் அஜித்குமார் மீது கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நிகிதா என்பவர் நகை திருட்டு புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் அஜித்குமாரை அழைத்து சென்று தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது, போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த கொலை வழக்கு சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு தனிப்படை காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நிகிதா அளித்த நகை திருட்டு புகார் தொடர்பான வழக்கு, மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிகிதா நேரில் ஆஜராகி எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்தார்.
திருடு போனதாக கூறப்படும் நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே நகை திருட்டு வழக்கை முடித்து வைக்கிறோம் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு நிகிதா சம்மதம் தெரிவித்ததன் பேரில் நகை திருட்டு புகாரை நீதிமன்றம் முடித்து வைத்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிகிதா, தான் புகார் அளித்த அஜித் குமார் தற்போது உயிரோடு இல்லை என்றும் இந்த வழக்கை நடத்தி நகை கிடைத்தாலும் அதை அணியக்கூடிய மனநிலையில் தான் இல்லை என்றும் கூறினார்.
















