டாடா குழுமத்தின் மறைந்த தலைவர் ரத்தன் டாடாவின் வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு தென்மும்பையில் 3 மாடிகள் கொண்ட பக்தவார் என்ற கட்டடத்தில் வசித்து வந்தார். இக்கட்டடம் மும்பை கொலாபா பகுதியில் இருக்கிறது.
13,200 சதுர அடி கொண்ட இந்த வீட்டில் ரத்தன் டாடா இறக்கும் வரை வசித்து வந்தார். அவர் இறந்த பிறகு அந்த வீடு டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஈவார்ட் இன்வெஸ்ட்மென்ட் என்ற கிளை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
தற்போது அந்த வீட்டை டாடா சன்ஸ் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து இருக்கிறது.
ரத்தன் டாடா 2024ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி இறந்தார். அவர் இறந்த அடுத்த நாளான அக்டோபர் 10ம் தேதியில் இருந்து இந்த குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
ஒரு மாதத்திற்கு 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மாத வாடகையாகும். இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இது கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் 10, முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மொத்தம் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர வட்டி இல்லாத பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ. 10 கோடி செலுத்தப்பட்டுள்ளது என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















