சபரிமலை ஐய்யப்பன் கோயில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட அபிஷேக நெய்யில் 25 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நெய் அபிஷேக பாக்கெட்டுகள் சன்னிதானத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், கடந்தாண்டு நடந்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது நெய் விற்பனையில் ஈடுபட்ட ‘அதி இஷ்டம் நெய்’ நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறையினர் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தணிக்கைத்துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தணிக்கைத்துறை இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அதில், ஐய்யப்பன் கோயிலில் நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்த கணக்குகளில் 25 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெய் விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான பதிவேடுகளும் முறையாக கையாளப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த சீசனுக்குள் நெய் விற்பனை முறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும், விற்பனை கவுன்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனவும் தேவஸ்வம் போர்டின் தணிக்கைத்துறை பரிந்துரைத்துள்ளது.
















